தென் கிழக்கு பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றவுள்ள சவூதி தூதுவர்

தென் கிழக்கு பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றவுள்ள சவூதி தூதுவர்

றிப்தி அலி

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 3ஆம் திகதி சனிக்கிழமையும் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் பல்கலைக்கழகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.

ஆறு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த பட்டமளிப்பு விழாவில் 2,073 பேர் பட்டம் பெறவுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உப வேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீதின் வழிகாட்டலில் பல்கலைக்கழக வேந்தரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் பங்குபற்றலுடன் இந்த பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.

இதன் முதலாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான  பீடத்தில் 172 பேரும், பொறியியல் பீடத்தில் 82 பேரும் தொழிநுட்ப பீடத்தில் 101 பேரும் பட்டம்பெறவுள்ளனர். இந்த அமர்வில் உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கொடேகொட சிறப்புரையாற்றவுள்ளார்.

இப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வில் கலை மற்றும் கலாசார பீடத்தினைச் சேர்ந்த 314 பேர் பட்டம் பெறவுள்ளனர். இதன்போது களனி பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் சீதா பீ. பண்டார சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.

இதேவேளை, இந்த பட்டமளிப்பு விழாவின் 3ஆவது அமர்வாக இடம்பெற்றவுள்ள இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி சிறப்புரையாற்றவுள்ளார்.

தென் கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் அதன் பட்டமளிப்பு விழாவில் வெளிநாட்டு தூதுவரொருவர் சிறப்புரையாற்றுவது இதுவே முதல் தடவை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த அமர்வில் 342 பேருக்கு பட்டம் வழங்கப்படவுள்ளது.

இப்பட்டமளிப்பு விழாவின் நான்காவது அமர்வில் முகாமைத்துவம் மற்றும் வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த 378 பேர் பட்டம் பெறவுள்ளனர். இதன்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல். வசந்த குமார சிறப்புரையாற்றவுள்ளார்.

இதற்கு மேலதிகமாக 5ஆவது மற்றும் 6ஆவது அமர்வுகளில் வெளிவாரி கலை மற்றும் வர்த்தக பட்டதாரிகளாக 684 பேர் பட்டம் பெறவுள்ளனர். இந்த அமர்வுகளில் முறையே ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுற்றுல்லா முகாமைத்துவ பேராசிரியர் மனோஜ் சமரதுங்க மற்றும் யாழ். பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் பீடாதிபதியான சிரேஷ்ட பேராசிரியர் வேலணம்பி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர்.